Sai-Satcharitra-Tamil-Chapter-40 - saimagic.com

Sai-Satcharitra-Tamil-Chapter-40

🔯 SaiMagic.com 🔯

 sai satcharitra english book

(1) திருமதி தேவின்‌ 'உத்யாபன்‌' விழாவிற்கு ஒரு சந்நியாசிபோல்‌ மற்ற இருவருடன்‌ செல்லுதல்‌ (2) ஒரு சித்திர ரூபத்தில்‌ ஹேமத்பந்தின்‌ வீட்டுக்குச்‌ செல்லுதல்‌

முன்னுரை‌

தம்‌ அடியவர்களுக்கு லெளகிக, ஆன்மிக விஷயங்களில்‌ அறிவுரை பகரும்‌ ஸ்ரீ சமர்த்த சாயி புனிதமானவர்‌. தங்கள்‌ வாழ்வின்‌ லட்சியத்தை அவர்கள்‌ எய்தும்‌ வண்ணம்‌ அவர்களை ஊக்குவித்து மகிழ்வடையச்‌ செய்கிறார்‌. அவர்களின்‌ தலையில்‌ தம்‌ கையால்‌ ஆசீர்வதிக்கும்போது தமது சக்தியை அவர்களிடம்‌ மாற்றி, பேதப்படுத்தும்‌ உணர்ச்சியை அழிக்கிறார்‌. த்வைத உணர்வின்றி, வித்தியாசமின்றி பக்தர்கள்‌ கீழே வீழ்ந்து வணங்கும்போது அவர்களை அரவணைத்து எட்டி அடையமுடியாத பொருளாகிய தம்மையே அவர்களுக்குக்‌ கொடுக்கிறார்‌.

மழைக்காலத்தில்‌ கடல்‌, ஆறுகளுடன்‌ கலப்பதுபோல்‌ பக்தர்களுடன்‌ அவர்‌ ஒன்றாகி அவர்களுக்குத்‌ தம்‌ ஆற்றலையும்‌, அந்தஸ்தையும்‌ அளிக்கிறார்‌. கடவுளின்‌ லீலையை மட்டும்‌ பாடிக்கொண்டிருப்போருக்கு நிகராக அல்லது அவர்களைக்‌ காட்டிலும்‌ கடவுளின்‌ அடியவர்களின்‌ லீலா வினோதங்களைப்‌ பாடுவோர்‌ பாபாவுக்குப்‌ பிரியமானவர்கள்‌ என்பது இதன்‌ மூலம்‌ அறியப்படுகிறது. தற்போது இவ்வத்தியாயத்தின்‌ கதைகளுக்குத்‌ திரும்புவோம்‌.

திருமதி தேவின்‌ உத்யாயன்‌ விழா

தாணே ஜில்லாவிலுள்ள டஹாணூ மம்லதார்‌ திரு B.V. தேவ்‌, அவரது தாயார்‌ 25 - 30 விதமான பிரார்த்தனைகளை அனுஷ்டித்ததன்‌ முடிவாக ஒரு உத்யாபன்‌ (பூர்த்தி) விழாவை நடத்த இருந்தார்‌. நூறு அல்லது இருநூறு அந்தணர்களுக்கு உணவளிப்பதும்‌ இவ்விழாவுடன்‌ சேர்ந்தவொரு அம்சமாகும்‌. தேவ்‌, விழாவுக்கு ஒரு நாளை நிச்சயித்தார்‌. சாயிபாபாவின்‌ விஜயத்தாலன்றி விழா உரியமுறையில்‌ பூர்த்தி அடையாதாகையால்‌, விழா விருந்தில்‌ கலந்துகொள்ள அவரின்‌ சார்பில்‌ பாபாவை வேண்டிக்கொள்ளுமாறு பாபு சாஹேப்‌ ஜோகிற்கு ஒரு கடிதம்‌ எழுதியிருந்தார்‌. பாபாவிடம்‌, பாபு சாஹேப்‌ ஜோக்‌ அக்கடிதத்தைப்‌ படித்துக்‌ காண்பித்தார்‌. பாபா, தேவின்‌ தூய்மையான, உள்ளபூர்வமான அழைப்பினை கவனத்துடன்‌ கருத்திற்கொண்டு கூறினார்‌, “என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான்‌ எப்போதும்‌ நினைத்துக்கொண்டு இருக்கிறேன்‌. எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, ரயிலோ அல்லது விமானமோ தேவையில்லை. என்னை எவன்‌ அன்புடன்‌ கூப்பிடுகிறானோ அவனிடம்‌ ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக்‌ கலந்துகொள்கிறேன்‌. நம்மில்‌ மூன்றுபேர்‌ (மூவர்‌) நான்‌, நீ, மற்றும்‌ ஒருவன்‌ சென்று அவ்விழாவில்‌ கலந்துகொள்வதாக அவருக்கு ஒரு மகிழ்வான பதில்‌ எழுது” என்றார்‌.

ஜோக்‌, பாபா கூறியதை தேவிடம்‌ தெரியப்படுத்தினார்‌. பின்னவர்‌ மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாரெனினும்‌, பாபா தாமே நேரிடையாக ராஹாதா, ரூய்‌, நீம்காவன்‌ முதலிய இடங்களைத்‌ தவிர வேறு இடங்களுக்குச்‌ சென்றதில்லை என்பது அவருக்குத்‌ தெரியும்‌. பாபா சர்வவியாபியாய்‌ இருப்பதால்‌ அவரால்‌ இயலாதது ஒன்றும்‌ இல்லை என்றும்‌, அவர்‌ விரும்பினால்‌ எந்த ரூபத்திலும்‌ திடீரென்று வந்து தமது சொற்களை நிறைவேற்றலாம்‌ என்றும்‌ எண்ணினார்‌.

இதற்கு சில நாட்களுக்கு முன்னர்‌ வங்காள உடையிலுள்ள ஒரு சந்நியாசி, பசுக்களைப்‌ பாதுகாத்தலே தனது குறிக்கோள்‌ எனக்‌ கூறிக்கொண்டு டஹாணூ ஸ்டேஷன்‌ மாஸ்டரிடம்‌ நிதி வசூலிக்க வந்தார்‌. பின்னவர்‌ அவரை ஊருக்குள்‌ சென்று மம்லதார்‌ தேவ்வைப்‌ பார்த்து அவரின்‌ உதவியால்‌ நிதி சேகரிக்கச்‌ சொன்னார்‌. அத்தருணம்‌ மம்லதார்‌ அங்குவர நேர்ந்தது. ஸ்டேஷன்‌ மாஸ்டர்‌ சந்நியாசியை அவருக்கு அறிமுகப்படுத்தினார்‌. இருவரும்‌ மேடையில்‌ அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்‌.

தேவ்‌, வேறு ஒரு தர்மத்திற்காக ஒரு நிதி வசூல்‌ ஏற்கனவே ராவ்‌ சாஹேப்‌ நரோத்தம்‌ ஷெட்டி என்ற பெரிய மனிதர்‌ ஒருவரால்‌, ஆரம்பிக்கப்பட்டுள்ளதால்‌ பிறிதொரு நிதி வசூலைத்‌ தற்போது ஆரம்பிப்பது நன்றல்லவென்றும்‌ அவர்‌ இரண்டு அல்லது நான்கு மாதங்களுக்குப்‌ பின்னர்‌ அவ்விடத்துக்கு விஜயம்‌ செய்தால்‌ நல்லதென்றும்‌ அவரிடம்‌ கூறினார்‌. இதைக்கேட்டு அத்துறவி அவ்விடத்தைவிட்டு அகன்றார்‌.

ஒரு மாதத்திற்குப்‌ பின்னர்‌ அத்துறவி ஒரு குதிரை வண்டியில்‌ காலை சுமார்‌ 1௦ மணியளவில்‌ வந்து தேவின்‌ வீட்டின்முன்‌ நின்றார்‌. தேவ்‌ அவர்‌ நிதிக்காக வந்திருப்பதாக நினைத்தார்‌. விழாவுக்கான ஏற்பாடுகளில்‌ அவர்‌ ஈடுபட்டிருப்பதைக்‌ கண்டு, அத்துறவி தாம்‌ பணத்துக்காக வரவில்லையென்றும்‌ உணவிற்காக அங்கு வந்திருப்பதாகவும்‌ கூறினார்‌.

தேவ்‌ : மிக்க நன்று. மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு நல்வரவு. இவ்வீடு தங்களுடையது.

துறவி : என்னுடன்‌ மற்றும்‌ இருவர்‌ இருக்கிறார்கள்‌

தேவ்‌ : நல்லது, அவர்களையும்‌ அழைத்துக்கொண்டு வாருங்கள்‌.

விருந்து நடைபெற இன்னும்‌ இரண்டு மணிநேரம்‌ இருந்ததால்‌, எங்கு சென்று அவர்களை அழைத்து வரவேண்டுமென தேவ்‌ கேட்டார்‌. “அது தேவையில்லை. குறிப்பிட்ட நேரத்தில்‌ நானே அவர்களுடன்‌ வருவேன்‌” என்றார்‌. தேவ்‌ அவரை நடுப்பகலில்‌ வரும்படிக்‌ கூறினார்‌. சரியாக மதியம்‌ பன்னிரெண்டு மணிக்கு அம்மூவரும்‌ வந்து விருந்தில்‌ பங்கேற்று, விருந்து உண்டபின்‌ சென்றுவிட்டனர்‌. விழா முடிந்ததும்‌ தேவ்‌, பாபாவின்‌ வாக்குறுதி மீறலைக்‌ குறித்து வருந்தி பாபு சாஹேப்‌ ஜோகிற்கு ஒரு கடிதம்‌ எழுதினார்‌. ஜோக்‌ பாபாவிடம்‌ அக்கடிதத்துடன்‌ சென்று அதைத்‌ திறக்கும்‌ முன்னரே பாபா, “ஆ! நான்‌ வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக அவன்‌ கூறுகிறான்‌. விருந்துக்கு நான்‌ மற்ற இருவருடன்‌ செல்லவே செய்தேன்‌. ஆனால்‌ அவன்‌ என்னைப்‌ புரிந்துகொள்ளவில்லை. பின்னர்‌ எதற்காக என்னை அழைக்க வேண்டும்‌? சந்நியாசி நிதி கேட்க அவனிடம்‌ வந்திருப்பதாக அவன்‌ எண்ணினான்‌. அதுபற்றி அவனது ஐயத்தை நான்‌ நீக்கவில்லையா? மற்றும்‌ இருவருடன்‌ வருவதாக நான்‌ கூறவில்லையா? மூவரும்‌ உரிய நேரத்தில்‌ வந்து உணவு உட்கொள்ளவில்லையா? பார்‌,

எனது மொழிகளைக்‌ காப்பதற்கு நான்‌ எனது உயிரையே தியாகம்‌ செய்வேன்‌. எனது மொழிகளுக்கு மாறுபட்டு நான்‌ இருக்கவே மாட்டேன்‌” என்றார்‌. இப்பதில்‌ ஜோகின்‌ உள்ளத்தை மகிழ்வடையச்‌ செய்தது. இவை அனைத்தையும்‌ தேவ்க்குத்‌ தெரிவித்தார்‌.

அதை அவர்‌ படித்தவுடனே ஆனந்தக்‌ கண்ணீர்‌ விட்டார்‌. வீணாக பாபாவைக்‌ குற்றம்‌ கூறியதற்காக தம்மைத்தாமே கடிந்துகொண்டார்‌. துறவியின்‌ முந்தைய வருகையினால்‌, தான்‌ எவ்வாறு ஏமாற்றப்பட்டார்‌ என்பதையும்‌, உணவுக்காக தாம்‌ இருவருடன்‌ வருவதாகக்‌ கூறிய துறவியின்‌ கூற்றிலுள்ள குறிப்பை தான்‌ எங்ஙனம்‌ புரிந்துகொள்ளத்‌ தவறிவிட்டார்‌ என்பதையும்‌ குறித்து மிகவும்‌ ஆச்சரியப்பட்டார்‌.

அடியவர்கள்‌ தாங்களே முழுமையாக சத்குருவிடம்‌ சரணாகதி அடையும்போது, அவர்தம்‌ வீட்டில்‌ நடைபெறும்‌ மதச்சடங்குகள்‌ உரியமுறையில்‌, தேவையான சம்பிரதாயங்களுடன்‌ நடத்தப்படுகின்றனவா என்று அவர்‌ கவனிக்கிறார்‌ என்பதை இக்கதை நமக்குத்‌ தெளிவாகக்‌ காட்டுகிறது.

ஹேமத்பந்தின்‌ ஹோலிப்பண்டிகை விருந்து

பாபா தமது சித்திர ரூபத்தில்‌ தோன்றி தமது அடியவரின்‌ ஆவலைப்‌ பூர்த்தி செய்தார்‌ என்பதைக்‌ கூறும்‌ மற்றொரு கதையைக்‌ காண்போம்‌.

1917ம்‌ ஆண்டு பங்குனி மாதம்‌ பெளர்ணமி ஹோலிப்பண்டிகையன்று காலை ஹேமத்பந்துக்கு ஒரு காட்சி தோன்றியது. பாபா அவரது கனவில்‌ நன்றாக உடையணிந்த ஒரு துறவியைப்போன்று தோன்றி அவரை எழுப்பி அன்று உணவுக்காக அவரிடம்‌ வருவதாகக்‌ கூறினார்‌. கண்விழித்து எழுந்த அவர்‌ துறவியையோ அல்லது சாயியையோ காணவில்லை. ஆனால்‌ அவர்‌ கனவை நினைவுகூரத்‌ தொடங்கியபோது, கனவில்‌ துறவி கூறிய ஒவ்வொரு வார்த்தையையும்‌ ஞாபகத்தில்‌ கொணர்ந்தார்‌.

ஏழு ஆண்டுகளாக பாபாவுடன்‌ அவர்‌ தொடர்புடையவராக இருந்தாலும்‌, பாபாவையே எப்போதும்‌ தியானித்தபோதிலும்‌ பாபா உணவுக்காகத்‌ தம்‌ வீட்டுக்கு வருவார்‌ என்று அவர்‌ எதிர்பார்க்கவில்லை. ஆயினும்‌ பாபாவின்‌ மொழிகளால்‌ மனம்‌ மகிழ்ந்து தமது மனைவியிடம்‌ சென்று அன்று ஒரு புனிதமான நாளாக இருப்பதால்‌ ஒரு துறவி விருந்தாளி உணவுக்காக வருகிறார்‌ என்றும்‌, அதிகமான உணவு தயார்‌ செய்யவேண்டுமென்றும்‌ கூறினார்‌. அவள்‌ விருந்தாளியைப்பற்றி யார்‌? எப்போது வருகிறார்கள்‌? எனக்கேட்டாள்‌. தமது மனைவியை அலைக்கழிக்காத நியதியின்‌ பொருட்டும்‌, தப்பு எண்ணத்தைத்‌ தவிர்த்தற்காகவும்‌ உண்மையை அதாவது கனவினைப்‌ பற்றி அவளிடம்‌ கூறினார்‌.

பாபா, அவ்விடத்திற்கு (பாந்த்ரா) ஷீர்டியிலிருந்து அங்குள்ள நேர்த்தியான உணவை விடுத்து சாதாரணமான தங்கள்‌ வீட்டு உணவை ஏற்க வருவாரா என்று அவள்‌ ஐயத்துடன்‌ கேட்டாள்‌. ஹேமத்பந்த்‌ அவளுக்கு, பாபா நேரிடையாக வரமாட்டார்‌ என்றும்‌, ஒரு விருந்தினர்‌ ரூபத்தில்‌ வருவார்‌ என்றும்‌ உறுதியளித்து இன்னும்‌ சற்று அதிகமாக சாதம்‌ வடிப்பதினால்‌ அவர்கள்‌ இழக்கப்போவது ஒன்றுமில்லை என்றும்‌ கூறினார்‌.

இதன்பின்னர்‌ விருந்துக்கான ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டு மதியத்திற்குள்‌ அது தயாராகியது. ஹோலி வழிபாடும்‌ செய்யப்பெற்று இலை போடப்பட்டது. அதைச்‌ சுற்றிலும்‌ கோலமிடப்பட்டது. நடுஸ்தானம்‌ விருந்தாளிக்கெனவும்‌ மற்றவர்களுக்கு இரண்டு வரிசைகளிலும்‌ இலைகள்‌ போடப்பட்டன. குடும்பத்தின்‌ எல்லா உறுப்பினர்களும்‌, மகன்கள்‌, பேரன்கள்‌, புத்திரிகள்‌, மருமகன்கள்‌ அனைவரும்‌ வந்து தத்தமது இடங்களில்‌ அமர்ந்தனர்‌. பல்வேறுவித உணவுவகைகள்‌ பரிமாறப்பட்டன. இது நிகழ்ந்துகொண்டிருக்கையில்‌ அனைவரும்‌ விருந்தாளிக்காக எதிர்பார்த்திருந்தனர்‌.

மதியம்‌ கடந்துவிட்டபோதிலும்‌ ஒருவரும்‌ வரவில்லை. பின்னர்‌ கதவு சாத்தப்பெற்று தாளிடப்பட்டது. பின்‌ அன்னசுத்தி (நெய்‌) விடப்பட்டது. இதுவே உண்ண ஆரம்பிப்பதற்கு அடையாளம்‌. அக்னிக்கு முறையான சமர்ப்பணமும்‌ கிருஷ்ணருக்கு நைவேத்தியமும்‌ கூட ஆயிற்று. குடும்பத்தினர்‌ உண்ண ஆரம்பிக்கும்‌ அதே தறுவாயில்‌ வாசலில்‌ காலடிச்‌ சத்தம்‌ தெளிவாகக்‌ கேட்டது. ஹேமத்பந்த்‌ உடனே சென்று கதவைத்‌ திறந்தார்‌. அலி முஹமது, மெளலானா இஸ்மு முஜாவர்‌ ஆகிய இருவரைக்‌ கண்டார்‌. உணவு தயாராக இருப்பதையும்‌ குடும்பத்தினர்‌ உண்ணத்‌ தயாராகவிருப்பதையும்‌ அவ்விருவரும்‌ கண்டு ஹேமத்பந்த்திடம்‌ மிகுந்த வருத்தம்‌ தெரிவித்துத்‌ தங்கள்‌ குறுக்கீட்டுக்கு மன்னிப்புக்‌ கோரினர்‌.

அவர்கள்‌, “எங்களுக்காக நீங்கள்‌ இருக்கையைவிட்டு எழுந்து ஓடி வந்திருக்கிறீர்கள்‌. மற்றவர்கள்‌ உங்களுக்காகக்‌ காத்துக்கொண்டிருக்கின்றனர்‌. எனவே தயவுசெய்து இந்த உங்கள்‌ பொருளைப்‌ பெற்றுக்கொள்ளுங்கள்‌. நாங்கள்‌, அதன்‌ வியத்தகு கதை முழுவதையும்‌ தங்களுக்குச்‌ செளகரியப்படும்போது பின்னர்‌ விவரிப்போம்‌” என்று கூறினார்கள்‌. இவ்வாறு கூறிக்கொண்டே பழைய செய்தித்தாள்‌ ஒன்றினால்‌ சுற்றப்பட்டிருந்த பொட்டலம்‌ ஒன்றை மேஜையின்மேல்‌ வைத்தார்கள்‌. ஹேமத்பந்த்‌ அதனைப்‌ பிரித்துப்‌ பார்க்கையில்‌, அவருக்குப்‌ பெரும்‌ ஆச்சரியத்தையும்‌ வியப்பையும்‌ விளைவிக்கும்‌ வகையில்‌ சாயிபாபாவின்‌ பெரிய அழகிய படம்‌ (Bas-Relief) ஒன்றைக்‌ கண்டார்‌. உடம்பு முழுவதும்‌ மயிர்க்கூச்செறிய, கண்களில்‌ நீர்வழிய மிகவும்‌ மனமுருகி தனது தலையைத்தாழ்த்தி படத்திலுள்ள பாபாவின்‌ பாதங்களில்‌ வைத்துக்கொண்டார்‌. பாபா இத்தகைய ஆச்சர்ய லீலையால்‌ தம்மை ஆசீர்வதித்திருப்பதாக நினைத்தார்‌. அறிவதற்கு ஆர்வம்‌ மேலிட, அப்படத்தை அவர்கள்‌ எப்போது வாங்கினார்கள்‌ என்று கேட்டார்‌.

அலிமுஹமது தாம்‌ அதை ஒரு கடையிலிருந்து வாங்கியதாகவும்‌ எல்லோரும்‌ காத்திருப்பதால்‌ அப்படத்தைப்‌ பற்றிய எல்லா விவரங்களையும்‌ பிறிதொரு சமயம்‌ சொல்லுவதாகவும்‌ மற்றவர்களுடன்‌ அவரை உண்ணச்‌ செல்லுமாறும்‌ கூறினார்‌. ஹேமத்பந்த்‌ அவர்களுக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பிவிட்டுச்‌ சாப்பிட வந்தார்‌. பின்னர்‌ ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில்‌ படம்‌ வைக்கப்பட்டு நைவேத்தியம்‌ உரியமுறையில்‌ செய்தான பிறகு அனைவரும்‌ உண்ணத்‌ தொடங்கினார்கள்‌. படத்திலுள்ள அழகிய ரூபத்தைக்கண்டு அனைவரும்‌ மிகமிக சந்தோஷப்பட்டனர்‌. இவையெல்லாம்‌ எங்ஙனம்‌ நிகழ்ந்தன என்பது குறித்து வியந்தனர்‌.

ஹேமத்பந்தின்‌ கனவில்கூறிய மொழிகளை பாபா இவ்வாறாக நிறைவேற்றினார்‌. எல்லா விவரங்களுடன்‌ கூடிய அப்படத்தின்‌ கதை அதாவது எங்ஙனம்‌ அலி முஹமது அதைப்பெற்றார்‌? ஏன்‌ அதை அவர்‌ வாங்கினார்‌? ஹேமத்பந்திடம்‌ பின்‌ ஏன்‌ அதைக்‌ கொடுத்தார்‌? என்பவை எல்லாம்‌ அடுத்த அத்தியாயத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌

Shirdi Shri Sai Satcharitra Tamil book

PHP Social Sharing Buttons